தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய த.வெ.க. அரசு, எம்.எல்.ஏ.க்களிடம் கடன் வாங்கி ஆட்சி நடத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி, 3 கோடிக்கும் அதிகமானோர் த.வெ.க.விற்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், 65 சதவீத மக்கள் இந்த ஆட்சியை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவுகளின்படி, ஆளுங்கட்சிக்கு 1.72 கோடி வாக்காளர்கள் ஆதரவளித்த நிலையில், த.வெ.க.விற்கு எதிராக 3.21 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என்பதை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். மேலும், 118 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அல்லது கூட்டணி மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், த.வெ.க. ஆட்சி அமைத்தது எப்படி என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். நடிகர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதும், தனது வெற்றி மீது அவருக்கு நம்பிக்கை இல்லாததைக் காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட், விசிக, IUML போன்ற கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். கொள்கை ரீதியாக எதிரியாகக் கருதப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவை, கட்சித் தலைவருக்கே தெரியாமல் பெற்றிருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் அவர் கூறினார்.
புதிய ஆட்சி, புதிய ஆட்சி என கூறப்பட்டாலும், அதன் செயல்பாடு 'புஷ்பா' திரைப்பட பாணியில் நடப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். முதலமைச்சர் ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்திக்கும் முன், அவருக்கான சோபா செல்லப்பட்டு, அதன் பின்னரே முதலமைச்சர் செல்வதாகவும், இது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாகவும், த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
