சென்னை: அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நபருக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தவெக ஐடி விங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தைரியம் இருந்தால் திமுக ஐடி விங் இதை சட்டரீதியாக நிரூபிக்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளது.
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள தவெக ஐடி விங், 'திமுகவின் அரசியலே பொய்யும் புரட்டும் நிறைந்தது. அதன் தொடர்ச்சியாக திமுகவின் ஐடி விங், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை பரப்பி வருகிறது. தரம்தாழ்ந்த அரசியல் விமர்சனங்களையும், உண்மைக்கு மாறான தகவல்களையும் பொதுவெளியில் பரப்புவது திமுக ஐடி விங்கிற்கு வாடிக்கையாகிவிட்டது' என கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், 'அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாமல், தேர்தல் தோல்வியால் பித்துப் பிடித்த மனநிலையில் உள்ள திமுக தலைமை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்து வதந்திகளை பரப்புகிறது. ஐந்து வருட திமுக ஆட்சியில் போதை கலாச்சாரத்தை ஊக்குவித்து தமிழகத்தை நாசமாக்கியதை மக்கள் மறக்கவில்லை. தற்போது இந்த அரசு போதை கலாச்சாரத்தை ஒழிக்க போராடி வருகிறது. திமுகவின் பொய்களுக்கும், நாகரீகமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் விரைவில் சட்டரீதியாக பதிலடி கொடுப்போம். அமைச்சர் மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்த திமுக ஐடி விங்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்' என்றும் தவெக ஐடி விங் குறிப்பிட்டுள்ளது.