கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களின் ஊதியம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கக் கோரிய முக்கிய மனு, நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள கோவில் பணியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம், உத்தர பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றபோது, அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள், தங்களுக்கு அன்றாட வாழ்க்கைச் செலவுக்குக் கூட போதுமான ஊதியம் வழங்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த உபாத்யாயா என்பவர், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, கோவில் பணியாளர்களின் ஊதியப் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், அர்ச்சகர்கள் தட்சணை வாங்கக் கூடாது என அரசு விதித்துள்ள தடையால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், முறையான சம்பளம் வழங்கப்படாத நிலையில், தட்சணை வருமானத்திற்கும் தடை விதிக்கப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் உள்ள சிறிய கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ₹1,000 முதல் ₹3,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், இது அவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவது போல, கோவில் பணியாளர்களின் தகுதி, பணி நேரம், வாழ்க்கைச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர்களின் ஊதியத்தை முறைப்படுத்த ஒரு தனி நிபுணர் குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், குழந்தைகளின் கல்விக்கான உதவிகள் போன்ற அடிப்படை நலத்திட்டங்களையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு இந்த மனுவை நாளை விசாரிக்க உள்ளது.