தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் அரசு ஏற்கனவே சுமார் ரூ. 22,500 கோடி செலவில் 4.50 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 2,000 வீடுகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், ஹைதராபாத் பெருநகர பகுதியில் உள்ள 24 சட்டப்பேரவை தொகுதிகளில், குறைந்த வருவாய் பிரிவினருக்காக ஒரு லட்சம் வீடுகளைக் கட்டவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட 'அடுத்த தலைமுறை உயிரியல் அறிவியல் கொள்கை 2026-30' திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டையும், ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளையும் ஈர்ப்பதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், மின் விநியோகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் 'RDSS' திட்டத்தில் இணைவதற்கான மாநில மின் விநியோக நிறுவனங்களின் முன்மொழிவுகளுக்கும், 'பாலமூரு – ரங்கா ரெட்டி' நீர்ப்பாசனத் திட்டத்திற்காக ரூ. 587 கோடி ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.