தமிழகத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கோவை, சேலம், திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாரதி, 'தமிழக அரசு 2500-க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்' என்று தெரிவித்தார்.
23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போதைய அரசு தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். 'போதையில்லா தமிழகத்தை வெற்றிக் கழக அரசு கொண்டு வரும் என்று கூறினாலும், டாஸ்மாக் பார்களை தனியாருக்கு கொடுப்பதால் மட்டும் போதையில்லா தமிழகத்தை உருவாக்கிவிட முடியாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு 48 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை அரசுக்கு ஈட்டித் தந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பாரதி வலியுறுத்தினார். ஒரு நாளைக்கு 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தரும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். உடனடியாக அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், தனியார்மயத்தை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர பணப் பலன்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
