தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு, மேலும் 54 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்தும் தமிழக அரசின் திட்டத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தற்போது மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு போதைப் பழக்கமே முக்கியக் காரணம். இத்தகைய சூழலில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. ஆனால், அதை விட்டுவிட்டு மதுபான வகைகளைக் கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்கும் முயற்சியில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட வகை மதுபானங்கள் எப்போதாவது வெளியூர்களுக்குச் சென்றால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, அனைத்து வகை மதுபானங்களையும் கைக்கு எட்டும் தூரத்திலேயே கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். எனவே, டாஸ்மாக் கடைகளில் அதிகளவிலான மதுபானங்களை அறிமுகம் செய்யும் இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். முடிந்த வரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து, தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
54 புதிய மதுபான ரகங்கள்: தமிழக அரசுக்கு பாஜக கடும் எதிர்ப்பு!

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை