தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதில் என்ன நியாயம் உள்ளது என்றும், நவம்பர் 1-ம் தேதியே தமிழ்நாடு நாளாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர், ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளையொட்டி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழியின் பெருமை மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு குறித்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும் என்றும், வெற்றி பெறுவோருக்கு தலா ரூ.50,000, ரூ.30,000, ரூ.20,000 பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் பெருமைகளை பரப்புவதற்கான இத்தகைய பணிகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், வரலாற்றைத் திரிக்கும் முயற்சி தொடர்வதை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் முறையே கர்நாடகம் நாள், கேரளம் நாள், ஆந்திரம் நாள், புதுச்சேரி நாள் என நவம்பர் 1-ம் தேதியை கொண்டாடி வருகின்றன. அதேபோல், நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளது. தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையும் இதுவாகவே இருந்துள்ளது.
இதையேற்று, 2019-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தார். ஆனால், 2021-ம் ஆண்டில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், சம்பந்தமே இல்லாமல் ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இது வரலாற்றைத் திரிக்கும் செயல் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜூலை 18-ம் தேதிக்கு சிறப்புகள் உண்டு என்றாலும், தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் தகுதி அந்த நாளுக்கு இல்லை. இன்றைய நிலப்பரப்பைக் கொண்ட மாநிலம், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிரிக்கப்பட்ட பின்னர், பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. 1967-ம் ஆண்டில் அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், அதே ஆண்டில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு ஜூலை 18-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வரலாற்றின்படி பார்த்தால், ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட என்ன நியாயம் உள்ளது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூலை 18 என்பது தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்ட நாள்தான். ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்த நாளாகக் கொண்டாட முடியாது. இது வரலாற்றைத் திரிக்கும் அபத்தமான செயல். திமுக ஆட்சியில் தவறான வழிகாட்டுதல் அல்லது உள்நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னும் அதே வரலாற்றுத் திரிபை பின்பற்றுவதும், நியாயப்படுத்துவதும் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு செய்யப்படும் துரோகம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு நாள் என்றால் அது நவம்பர் ஒன்றாம் நாள்தான். அது தான் மக்கள் மனதில் நிலைநிறுத்தப்பட வேண்டும். மாறாக, ஜூலை 18-ம் நாளை தமிழ்நாடு என்று அழைப்பதும், அதை நிலைநிறுத்தும் வகையில் தவறான வரலாற்றின் அடிப்படையில் பேச்சுப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதும் ஏற்க முடியாதவை. இந்த அபத்தத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். தேவைப்பட்டால் தமிழ் அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், எல்லைப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை அழைத்து பேசி தமிழ்நாடு நாள் எது? என்பதை தீர்மானிக்க வேண்டும்; மாணவச் செல்வங்களுக்கு பெருமைமிக்க உண்மை வரலாற்றை போதிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
