தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3.55 கோடி மதிப்பிலான முழு உதவித்தொகையைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் மாணவர்கள் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை நோக்கிச் செல்லும் நிலையில், அவற்றைத் தவிர்த்து தனது தனிப்பட்ட திறமைகள் மற்றும் சமூகப் பணிகளின் அடிப்படையில் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பிரவுன் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் எட்டு ஐவி லீக் (Ivy League) பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 1764-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஹார்வர்டு மற்றும் யேல் பல்கலைக்கழகங்களைப் போலவே, அமெரிக்கா உருவாவதற்கு முன்பே தொடங்கப்பட்ட ஒரு பழமையான கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்ற தனது பகுதியைச் சேர்ந்த ஒரு மூத்த மாணவர் மூலம், பிரணவுக்கு வழிகாட்டுதல் திட்டங்கள் (Mentorship programmes) பற்றி முதன்முதலில் தெரியவந்தது. இது அவரது வெளிநாட்டுப் படிப்பு கனவுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது.
பிரணவின் பெற்றோர் இருவரும் ஈரோட்டில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். அவரது தந்தை ஜவுளித் தொழில்நுட்பத் துறையிலும், தாய் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கற்பிக்கின்றனர். 10-ம் வகுப்பு வரை ஈரோட்டில் படித்த பிரணவ், பின்னர் கோவையில் உள்ள பள்ளியில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் ஏ-லெவல் படிப்பை முடித்தார். 6-ம் வகுப்பில் இருந்தே கேம்பிரிட்ஜ் ஐஜிசிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறிய அவர், 9 பாடங்களிலும் ‘ஏ ஸ்டார்’ மதிப்பெண்களையும், ஏ-லெவல் படித்த 6 பாடங்களிலும் அதிகபட்ச மதிப்பெண்களையும் பெற்று அசத்தினார்.
8-ம் வகுப்பு முதலே டெக்ஸ்டெரிட்டி குளோபல் என்ற அமைப்பின் வழிகாட்டுதல் திட்டத்தில் இணைந்த பிரணவ், வெளிநாட்டு பல்கலைக்கழக விண்ணப்பம், தனிநபர் வளர்ச்சி, சமூகப் பணிகள் போன்றவற்றில் பெற்ற வழிகாட்டுதலால், வெளிநாட்டில் படிப்பது சாத்தியமே என்ற நம்பிக்கையைப் பெற்றார். இந்தியாவில் பல மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நம்பியிருப்பதற்கு, வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம் என அவர் குறிப்பிடுகிறார்.
சிறு வயது முதலே கணிதம் மற்றும் எண்கள் மீது ஆர்வம் கொண்ட பிரணவ், பின்னர் பொதுச் சுகாதாரத் துறையிலும் தனது கவனத்தைத் திருப்பினார். 11-ம் வகுப்பில் நண்பருடன் இணைந்து ‘தமிழ்நாடு புற்றுநோய் புள்ளிவிவரத் திட்டம்’ (TNCSP) என்ற முயற்சியைத் தொடங்கினார். அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தரவுகளைச் சேகரித்து, அவற்றை இணையதளமாக்கி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரங்களையும் மேற்கொண்டார். தமிழில் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வழங்கி, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம் குறித்து மக்களிடம் விளக்கினார்.
படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு அப்பால், பிரணவ் ஒரு திறமையான போட்டி செஸ் வீரராகவும் திகழ்கிறார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் 1800 புள்ளிகள் பெற்றுள்ள அவர், பிரான்ஸில் நடைபெற்ற போட்டிகளிலும் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்றுள்ளார். மேலும், ஏ-லெவல் மாணவர்களுக்கான இணையவழி குறிப்புகள் தளமான ‘எச்எஸ் இன்குபேட்டர்’ அமைப்பையும் இணைந்து தொடங்கியுள்ளார். தற்போது அந்தத் தளத்தை 10,000 முதல் 20,000 மாணவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். பாடத்திட்டத்துக்கு ஏற்ற தரமான குறிப்புகள் கிடைப்பதில் இருந்த சிக்கலைத் தீர்க்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரவுன் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான ‘ஓபன் கரிகுலம்’ கல்வி முறையில் பிரணவ் படிக்க உள்ளார். இதில் மாணவர்கள் தங்களது இரண்டாம் ஆண்டின் இறுதி வரை முதன்மைப் பாடத்தை உறுதி செய்ய வேண்டியதில்லை. மொத்தமுள்ள 30 பாடங்களில் 16 பாடங்களை முடித்தாலே ஒரு பட்டம் பெற முடியும். மீதமுள்ள 14 பாடங்களைப் பயன்படுத்தி மற்றொரு பட்டத்தையும் பெறலாம். பிரணவ் பயன்பாட்டு கணிதத்தையும் பொதுச் சுகாதாரத்தையும் இணைத்துப் படிக்கத் திட்டமிட்டுள்ளார். 'செயல்முறை கணிதத்தில் கணினி அறிவியலின் அம்சங்களும் இருப்பதால், அது தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும். பொதுச் சுகாதாரப் பிரிவு, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான மேலாண்மை மற்றும் கள அறிவைத் தரும். படிப்பை முடித்த பிறகு இந்தியாவுக்குத் திரும்பி சொந்தமாக ஒரு ஸ்டார்ட்அப் அல்லது தொண்டு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும். புற்றுநோய் தரவு ஆய்வுகள் சார்ந்த எனது பின்னணி, இந்திய சுகாதார அமைப்பைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவும். இதனிடையே அமெரிக்கா அல்லது வெளிநாட்டில் முதுகலைப்பட்டம் படிக்கக் கூடும் என்றாலும், இறுதி இலக்கு இந்தியா திரும்புவதுதான்' என பிரணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள கல்லூரிகளுக்கு பிரணவ் விண்ணப்பிக்கவில்லை. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களையும் மாற்று வாய்ப்புகளாகக் கருதினார். அங்கும் உதவித்தொகை வாய்ப்புகள் இருந்தாலும், அமெரிக்காவில் கிடைத்த உதவித்தொகையைவிட அவை குறைவானவை. அமெரிக்கக் கல்வி முறை, மாணவர்களின் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் பார்க்காமல், அவர்களின் ஒட்டுமொத்த திறமைகள், தனிப்பட்ட பண்புகள், சமூகப் பங்களிப்பு மற்றும் எதிர்கால இலக்குகள் ஆகியவற்றையும் மதிப்பீடு செய்வதாக அவர் கூறினார். இந்தியாவில் நுழைவுத் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், மாணவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்கினாலும், பல்வேறு துறைகளில் திறமைகளை வளர்த்துக்கொண்டு முழுமையான கற்றல் அணுகுமுறையை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என பிரணவ் சுட்டிக்காட்டினார்.
