கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பிலோ அல்லது முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர், கர்நாடக அரசின் தரப்பு வாதத்தையே எதிரொலித்தார். தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'த.வெ.க. தலைவர் என்கிற நிலையில், பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளனர். இந்த சூழலில், சென்னையில் நாளை தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடவுள்ளது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறையினர் விசாரிப்பதற்கு பதிலாக, நம்பகமான நீதி விசாரணை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசு கோர வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
