சென்னை: தமிழக அரசு நிர்வாகத்தில் திடீர் மாற்றம்! உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த சங்கர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உட்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த இடமாற்றங்களின்படி, நிலச் சீர்திருத்தத் துறை ஆணையராக இருந்த எஸ்.விஜயகுமார், இனி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் செயலாளராகவும், தொழில் துறை செயலாளராக இருந்த வி.அருண் ராய், உயர்கல்வித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளராக இருந்த என்.சுப்பையன், இனி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக செயல்படுவார். மேலும், முன்னாள் முதல்வரின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய பி.உமாநாத், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
சிறப்புத் திட்டங்கள் துறை செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, இனி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராகப் பொறுப்பேற்பார். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.அருண் தம்புராஜ், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கே.இளம்பகவத், இனி சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ளார்.
மேலும், கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் இயக்குநராக ஆர்.பிருந்தா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் தனிச் செயலாளராகப் பணியாற்றிய எம்.எஸ்.சண்முகம், சுற்றுலாத் துறையின் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் கூடுதலாகச் செயல்படுவார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.