தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை சார்ந்த மேலும் பல அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, அரசு கல்லூரிகளில் படிக்கும் 2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும். இது பல மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், மாதம் ஒருநாள் 'புத்தகப் பை இல்லாத நாள்' கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
2 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் திறன்களை உறுதி செய்வதற்காக, சுமார் 10.5 லட்சம் மாணவர்களுக்கு 'திறன் ப்ளஸ்' என்ற திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களின் தனித்துவமான கற்றல் திறனை வலுப்படுத்தும் வகையில் 'தன்னிலை கற்றல் திட்டம்' ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உயர்கல்வி பயிலும் திருநர் மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். மாநில உருது அகாடமியில் உருது மொழி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மொத்தம் 6000 உதவிப் பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1000 கோடியில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள், அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 2026 செப்டம்பர் மாதம் முதல் கேரியர் அட்வான்ஸ்மென்ட் திட்டம் (CAS) தொடரப்படும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார். நடப்பு சட்டசபை அமர்வில் முதல்வர் ஜோசப் விஜய் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஒரு நல்ல செய்தியை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
