தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. இதில் காங்கிரஸ் ஆதரவு அளிக்க கடிதம் கொடுத்துள்ளது. பிற மூன்று கட்சிகள் ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளன.
மறுபுறம் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரிடம் த.வெ.க தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், வியாழக்கிழமை (மே 7) காலை வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததால் மீண்டும் ஆளுநரை விஜய் சந்தித்துப் பேசினார். இருப்பினும் த.வெ.க.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காமல் இருந்தார். இது சர்ச்சையான நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார். ஆனால் விஜய்யிடம் எந்த பெரும்பான்மையும் இல்லை. விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் என்று கூறினார்.
இதற்கிடையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. மேலும், அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் வெளியானது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்தது. எனினும், தி.மு.க. இதனை மறுத்தது. ஆனால், அ.தி.மு.க. கருத்து தெரிவிக்காமலே இருந்து வருகிறது. மேலும், த.வெ.க.வுக்கு ஆதரவு கிடையாது என்றும் அ.தி.மு.க. தெரிவித்து விட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.