தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது! வரவிருக்கும் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சி மாநாடு – 2026 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில், 'ஜாதி, மத வேறுபாடின்றி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை ஒரு பைசா கூட செலவு செய்யாமல், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க பயன்படுத்துவோம்' என்று குறிப்பிட்டார்.
மேலும், 'அதிக எண்ணிக்கையிலான பெண்களும், இளைஞர்களும் இணைந்து இந்த புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளனர். இந்த வளர்ச்சி, முதலமைச்சர் விஜய்யின் விருப்பப்படி இருக்க வேண்டும். வளர்ச்சிப் பாதையில் செல்ல தெளிவான நோக்கம் அவசியம். வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் தவெக அரசு, கடந்த கால ஆட்சியில் 'கட்சி நிதி' என்ற பெயரில் நடந்த ஊழல்களை ஒழித்துள்ளது. இதனால், தமிழ்நாடு இந்தியாவில் ஊழல் இல்லாத முதல் மாநிலமாக திகழ்கிறது. முதலீட்டாளர்கள் அனைவரும் தயக்கமின்றி தமிழ்நாட்டிற்கு வந்து முதலீடு செய்ய அழைக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்' என அவர் தெரிவித்தார்.
'உங்கள் முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தற்போது தமிழ்நாட்டில் 19 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது எங்கள் கடமை. தவறு செய்தால் மக்கள் எங்களை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். எதிர்க்கட்சிகள் 80 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால், பத்திரப்பதிவு, கட்டுமானம், உணவு, பொதுப்பணித்துறை போன்ற பல துறைகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மாற்றங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்' என்றும் அவர் விளக்கினார்.
வரவிருக்கும் பட்ஜெட் இதுவரை இல்லாத ஒரு புதிய பட்ஜெட்டாக இருக்கும் என்றும், அதில் பெரிய பெரிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். தமிழ்நாட்டின் எதிர்காலமாக இளைஞர்களை முதலமைச்சர் விஜய் கருதுவதாகவும், அதனடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
கல்வி மற்றும் பணியிடங்களில் வடக்கு, தென் மாவட்டங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், 'தர்மபுரி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் உயர்கல்வி பெறாமலும், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையையும் தவெக அரசு மாற்றும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
'அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு மாறும். வரும் பட்ஜெட்டில் முதலமைச்சர் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். தமிழ்நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம்' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையை நிறைவு செய்தார்.
