தமிழக சட்டமன்றத்தின் புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டி உரையாற்றிய ஆளுநர், விசில் புரட்சியின் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதாகவும், பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த தவெக அரசு சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநில உரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும் என்றும், எம்.ஜி.ஆர் 1977ல் நிகழ்த்திய புரட்சியைப் போல 2026ல் புதிய புரட்சி ஏற்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். 74 ஆண்டுகால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படை உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழக அரசு இருமொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறையில் அமைப்பு ரீதியான மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்பதை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.
முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளதாகவும், இயற்கை வள கொள்ளையை தடுத்து தமிழகத்தின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சமூக நீதி சர்வே என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆளுநர் உரையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேகதாது விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெற்றுத்தர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். சட்ட விரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.