சனாதன தர்மத்தை சாதிக்குள் அடைத்துவிட முயற்சி நடப்பதாக தமிழக பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட இந்தியாவில் சனாதனம் என்பது ஒன்று, தென் இந்தியாவில் சனாதனம் என்பது சமத்துவமின்மை என்று திமுகவின் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது அவரது அறியாமையால் அல்ல, மாறாக இந்து மதத்தின் மீது அவருக்கிருக்கும் வெறுப்பாலும், பிரிவினை மனப்பான்மையாலும்தான்" என குறிப்பிட்டுள்ளார்.
சாதி ஏற்றத்தாழ்வுகள் எல்லா மதங்களிலும் உள்ளன. அவற்றை சீர்திருத்தம் செய்ய வேண்டுமே தவிர, வெறுப்பை உமிழ்வது தவறு. சமத்துவத்தை அறிய ராமானுஜர், பாரதியார், ராஜாஜி ஆகியோரின் கருத்துக்களை படிக்க வேண்டும். அதை விடுத்து உதயநிதி ஸ்டாலின் கூறியதை வேறு வார்த்தைகளில் திரும்பக் கூறி, சாதிப் பிளவுகளையும், பிரிவினையையும் பேசுகிறீர்கள் என்பதே உண்மை. சனாதனம் என்பது தமிழகத்தின் ஆன்மா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
வேதம், உபநிடதம், திருக்குறள், தேவாரம், திவ்ய பிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் அனைத்தும் சனாதனத்தின் அங்கங்களாகும். காஞ்சி, ராமேஸ்வரம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருப்பதி போன்ற புனித தலங்கள் அனைத்தும் சனாதனத்தின் உயிர்நாடி. நீங்கள் இந்தத்துவத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, இந்துகளை எதிர்க்கிறீர்கள், பழிக்கிறீர்கள், அவமானப்படுத்துகிறீர்கள்.
90 சதவீத தமிழர்கள் பின்பற்றும் இந்து மதத்தையும், சனாதனத்தையும் சாதிக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள். சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது. உங்களது இந்து விரோத அரசியல்தான் ஒழிந்து போகும்" என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.