தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.க) கட்சி விலகுவதாக அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கூட்டணி அரசியலில் த.மா.க-வின் வளர்ச்சி தடைபடுவதாக நிர்வாகிகள் கருதுகின்றனர். கட்சி தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். உள்ளாட்சித் தேர்தல் வரை தனித்துச் செயல்பட்டு, கட்சியைப் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி, தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி அமைப்போம்' என்று தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. என்டிஏ கூட்டணியில் இருந்து நட்பு ரீதியாகவே விலகுவதாகவும், த.மா.க-வால் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை என்றும், த.மா.க இடம்பெற்ற கூட்டணிகளும் வெற்றி பெறவில்லை என்றும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார். பா.ஜ.க அல்லது அ.தி.மு.க உடன் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களால் அனைத்து கட்சிகளும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
600 பேர் கலந்துகொண்ட செயற்குழு கூட்டத்தில், 450க்கும் மேற்பட்டோர் த.மா.க தனித்துச் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக ஜி.கே.வாசன் தெரிவித்தார். கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தமிழ்நாட்டில் கூட்டணி தர்மத்திற்கு உதாரணமாக செயல்பட்ட கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வெற்றிக்காக பொறுப்புணர்வுடன் த.மா.க பணியாற்றியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணியில் இருந்ததால் கட்சியின் பலம் குறைந்துவிட்டதாக ஜி.கே.வாசன் தனது பேட்டியில் வேதனையுடன் குறிப்பிட்டார்.