தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வெளியான சம்பவங்கள் இதற்கு சான்றாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும், சூலூர் சிறுமியின் தாய்க்குத் தகவல் தெரிவிக்காமல் அவரது உடல் அவசரமாக எரிக்கப்பட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஒரு சிறுவன் படுகொலை செய்யப்பட்டதும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்-அமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், 'இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்பு வீரவசனம் பேசிய முதல்வர், தற்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் நிலையில், காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவது ஏற்கத்தக்கதல்ல என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நிலைமையின் தீவிரத்தை அரசு உணர வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
