இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மூத்த வீரர் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தாலும், கேப்டனாக சூர்யகுமாரின் தனிப்பட்ட பேட்டிங் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
35 வயதான சூர்யகுமார், உலகக்கோப்பை தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் மட்டுமே அரைசதம் கடந்தார். 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை இலக்கை நோக்கி இந்திய அணி தயாராகி வரும் நிலையில், சூர்யகுமார் அணியிலிருந்தே முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் அவருக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகும் பழைய ஃபார்ம் கிடைக்கவில்லை என்பது விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது விதிவிலக்காக அமைந்தது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜூன் 6, சனிக்கிழமை அன்று நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணித் தேர்வு கூட்டத்தில் வெளியானது. கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் நீக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், அவருடைய பேட்டிங் ரெக்கார்ட் தான். 2024-ஆம் ஆண்டிலிருந்து சூர்யகுமார் 103 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 100 இன்னிங்ஸ்களில் 2,760 ரன்களைக் குவித்துள்ள அவரது சராசரி 32.09 மற்றும் ஸ்டிரைக் ரேட் 153.84 ஆகும். இதில் ஒரு சதம் மற்றும் ஒன்பது அரை சதங்கள் அடங்கும்.
இந்திய அணிக்காக விளையாடிய 53 டி20 போட்டிகளில் 1,131 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள அவரது சராசரி 26.30 ஆகக் குறைந்துள்ளது, இது தற்போதைய பார்ம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் முறையே 187.43 மற்றும் 155.95 என மிகச்சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்திருந்த சூர்யகுமார், அதன் பிறகு கடும் சரிவைச் சந்தித்தார். சமீபத்திய ஐபிஎல் சீசனில் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். உள்ளூர் அணியான மும்பைக்காக விளையாடிய 10 போட்டிகளில் 297 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.