2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்லும் இலக்குடன் பிசிசிஐ தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்காக, இந்திய அணிக்கு போதுமான ஒருநாள் போட்டிகள் விளையாடும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், தேர்வுக்குழுவினரின் ஆலோசனையுடன் ஒரு தெளிவான திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு, 2023 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன், 2027 உலகக் கோப்பைக்கான தயாரிப்புகள் இப்போதே தொடங்கியுள்ளன. ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேவஜித் சைகியா மேலும் கூறுகையில், '2027 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ள இந்த முக்கிய தொடருக்கான தயாரிப்புகளை பிசிசிஐ ஏற்கனவே தொடங்கிவிட்டது. இப்போது முதல் 2027 அக்டோபர் வரை எங்களுக்குப் போதுமான ஒருநாள் போட்டிகள் உள்ளன. ஜூலை 14 முதல் 19 வரை இங்கிலாந்தில் நடக்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியை நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம்' என்றார்.
அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தலைமை பயிற்சியாளர், மற்ற பயிற்சி ஊழியர்கள் மற்றும் தேர்வுக்குழுவுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. புதிய உலகக் கோப்பைக்கான பயணத்தைத் தொடங்கியுள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய வீரர்களைப் பரிசோதித்துப் பார்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆப்கானிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.