சென்னை: நடிகர் சூர்யா, திரிஷா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய 'கருப்பு' திரைப்படம், படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆனாலும், பல்வேறு காரணங்களால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், மே 14 ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
பட வெளியீட்டை ஒட்டி அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்ற நிலையில், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முன்பதிவு நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், திட்டமிட்டபடி படம் வெளியாகும் என படக்குழுவினர் உறுதியளித்தனர். ஆனால், உலகளவில் நேற்று வெளியாகவிருந்த 'கருப்பு' திரைப்படம், காலை சிறப்பு காட்சி முதல் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால், நேற்று முழுவதும் 'கருப்பு' திரைப்படம் வெளியாகவில்லை.
படத்தை கொண்டாட கருப்பு சட்டை அணிந்து திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களும் ஏமாற்றத்திற்குள்ளாயினர். படம் வெளியாகாத விரக்தியில், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். படத்தின் நிதி சிக்கல்களை சரிசெய்ய படக்குழுவினர் தீவிரமாக முயன்றனர். நடிகர் சூர்யா தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில், அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு, நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் தமிழ்நாட்டில் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வடமாநிலங்களில் சில இடங்களில் நேற்று திட்டமிட்டபடி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.