புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இது நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கடந்த மே 5 ஆம் தேதி இந்த முக்கிய முடிவை எடுத்தது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமார் 93 லட்சம் வழக்குகளை விரைவாக முடிப்பதற்கும், நீதிபதிகளின் பணிச்சுமையைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்துவதற்காக, 1956 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் ஓய்வூதிய விதிகள்) சட்டத்தைத் திருத்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத காலங்களில், அவசரச் சட்டங்களை பிறப்பிக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 123-ன் கீழ் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2019 ஆம் ஆண்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 30-ல் இருந்து 33 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 38 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பணியிடங்களுக்கான நியமனங்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
