சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், சிஎஸ்கே ரசிகர்களைக் கிண்டலடிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கேவை இரண்டாவது முறையாக வீழ்த்தியதை 'நன்றி 2' எனக் குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 229 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 140 ரன்களுக்குச் சுருண்டு 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி, சிஎஸ்கேவின் பிளே-ஆப் கனவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு, சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமது சிராஜ் மற்றும் ஜோஸ் பட்லருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதில் மூவரும் உதட்டின் மேல் விரலை வைத்து 'வாயை மூடுங்கள்' என சைகை காட்டியுள்ளனர். இது, மைதானத்தில் ஆர்ப்பரித்த சிஎஸ்கே ரசிகர்களை அமைதியாக்கிவிட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், 'நன்றி 2. மஞ்சள் விளக்குகள், நீல நிறத்தில் முடிவு' (Nandri 2. Yellow lights, blue ending) என அவர் பதிவிட்டுள்ள வாசகம் சிஎஸ்கே ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இரண்டாவது வெற்றி என்பதால் 'நன்றி 2' என்றும், மஞ்சள் நிறச் சீருடை அணிந்த சிஎஸ்கே அணியின் கதை, நீல நிற குஜராத் அணியால் 'நீல நிற முடிவு' கண்டுள்ளது என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, போட்டியின் போது சிவம் துபேயின் கேட்ச்சை பிடித்த பிறகு, சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி அமைதியாக இருக்குமாறு கில் சைகை காட்டியது குறிப்பிடத்தக்கது. போட்டியிலும் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அசத்திய கில், சாய் சுதர்சனுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.