ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் (பொறுப்பு) மகாலட்சுமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 578 சார்பதிவாளர் அலுவலகங்களில், பல இடங்களில் உதவியாளர்களே பொறுப்பு சார்பதிவாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக தஞ்சாவூர் மண்டலம் பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில், உதவியாளர்கள் பொறுப்பு சார்பதிவாளர்களாக இருந்து லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இஷ்டம் போல் ஆட்களை நியமித்துக்கொண்டு, கேட்கும் தொகையை கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு நடைபெறும் என்றும், இல்லையெனில் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி பத்திரங்களை நிலுவையில் வைப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பட்டுக்கோட்டை ஜாயிண்ட் 1, ஜாயிண்ட் 2, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், திருவோணம், கீரமங்கலம், ஒரத்தநாடு, பாப்பாநாடு, சுப்பிரமணியபுரம், இரண்டாம் புலிக்காடு ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த நிலைமை நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில், பரமக்குடியில் ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மகாலட்சுமி கைது செய்யப்பட்டிருப்பது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.