ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில்

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வசதியாக, ஆந்திராவில் உள்ள 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையானை ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ரூ.10,500 கட்டணம் செலுத்தி தரிசிக்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு நபர் ரூ.10,000 நன்கொடை அளித்தும், விஐபி பிரேக் தரிசனத்திற்காக கூடுதலாக ரூ.500 செலுத்தியும் இந்த தரிசனத்தைப் பெற முடியும்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் வரும் நிதி, எஸ்.சி, எஸ்.டி, பி.சி பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் இந்து தர்ம பிரச்சாரத் துறையின் கீழ் இந்து கோயில்களைக் கட்ட பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. பக்தர்களிடையே இதற்கு பெரும் ஆதரவு இருப்பதால், திருமலையில் 800 ஆன்லைன் டிக்கெட்டுகளும், திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 200 டிக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன.

ஆன்லைனில் வழங்கப்படும் 800 டிக்கெட்டுகள் அன்றைய தினம் காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டு, அதேநாள் மாலை 4.30 மணிக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன. இதனால் ஒரே நாளில் சுவாமியை தரிசித்து விடலாம் என்ற எண்ணத்தில் பலர் இந்த டிக்கெட்டுகளை பதிவு செய்ய முன்வருகின்றனர். இதனால் இதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெறும் 2 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

மேலும், 3 மாதங்களுக்கு முன்பே தினமும் 500 டிக்கெட்டுகள் வீதம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இதுவும் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. இதனால், திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் தினசரி 200 டிக்கெட்டுகளைப் பிரித்து, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி ஆகிய விமான நிலையங்களில் தலா 50 டிக்கெட்டுகள் தினசரி வழங்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version