தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. மருத்துவத் துறையில் செவிலியர் உதவியாளர் நிலை – II பணிக்கான வேலை வாய்ப்பில், 3% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த சிறப்பு இடஒதுக்கீடு, தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்கள் நலனைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும். அரசாணை நிலை எண்.6, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை (S1) நாள்: 20.02.2019-ன் படி, ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளிலும், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பம் செய்யும் ஆண்டிற்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற விளையாட்டு சாதனைகளை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். குழு விளையாட்டுகளில் பங்கேற்றவர்கள், மாநில அளவில் குறைந்தது 50% போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் (ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப்கள், காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள், ஆசிய சாம்பியன்ஷிப்கள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், பாரா ஒலிம்பிக், ஆசிய பாரா ஒலிம்பிக், உலக விளையாட்டுகள், காது கேளாதோர் விளையாட்டுகள்) வெற்றி பெற்றவர்கள் அல்லது பங்கேற்றவர்கள் தகுதியானவர்கள். தேசிய அளவிலான போட்டிகளில் (தேசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள்) வெற்றி பெற்றவர்களும், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் (மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள்) வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியானவையாகக் கருதப்படும்.
ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், தகுந்த ஆவணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு வெளியான நாள் மே 25, 2026. விண்ணப்பங்கள் மே 26, 2026 அன்று காலை 10:00 மணி முதல் பெறப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 25, 2026 மாலை 5:00 மணி ஆகும்.