தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டிற்கான இளமறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 14 வகை பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி ஜூன் 8 ஆகும்.
மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியல், அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படும். பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும். தரவரிசைப் பட்டியல் வெளியான பின்னர், தகுதியான மாணவர்களுக்கு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பது குறித்த தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாதவர்கள் கலந்தாய்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கலந்தாய்வின் முடிவில், மாணவர்களின் தரவரிசை, சாதி, மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் பட்டப்படிப்பு மற்றும் கல்லூரி ஒதுக்கீடு செய்யப்படும்.
இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், தங்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்படும் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். சேர்க்கைக் கட்டணம் செலுத்திய பின்னரே, மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பு மற்றும் கல்லூரி ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் விவரங்களுக்கு ugadmissions@tnau.ac.in மற்றும் agridean2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.