இந்திய விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்ட தயாராகியுள்ளது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பவன் குமார் சந்தானாவால் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், தனது 'விக்ரம்-1' ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விரைவில் விண்ணில் செலுத்தவுள்ளது. 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமாகும். இஸ்ரோவில் 8 ஆண்டுகள் பணியாற்றிய விஞ்ஞானி பவன் குமார் சந்தானாவும், நாகா பரத் டாக்காவும் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கினர். தற்போது 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்புடன், இது இந்தியாவின் முன்னணி தனியார் விண்வெளி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கடந்த 2022-ல் 'விக்ரம் எஸ்' என்ற இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி ஸ்கைரூட் ஏற்கனவே தனது திறனை நிரூபித்துள்ளது.
'விக்ரம்-1' ராக்கெட் சுமார் 300 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. எதிர்காலத்தில், விண்வெளிப் பயணங்களை வாடகை கார் அல்லது விமானம் போல் எளிதாக்குவதே எங்கள் நோக்கம் என நிறுவன நிறுவனர் பவன் குமார் சந்தானா தெரிவித்துள்ளார். விண்வெளியை அனைவருக்கும் சாத்தியமாக்குவதே எங்கள் லட்சியம். மேலும், இனி தயாரிக்கப்படும் ராக்கெட்டுகள், விண்வெளி சுற்றுப்பாதைக்கு ஒரு டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டவையாக இருக்கும்.
தகவல் தொடர்பு, தரவு மையங்கள், நேரடி மொபைல் தொடர்பு போன்ற தேவைகள் அதிகரித்து வருவதால், சிறிய செயற்கைக்கோள்கள் மூலம் விண்வெளி தொகுப்புகளை உருவாக்கும் முறை பிரபலமடைந்து வருகிறது. இது விண்வெளித் துறையின் பொருளாதாரத்தை மாற்றி, ஸ்கைரூட் போன்ற நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. 'விக்ரம்-1' ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதல், இந்தியாவின் விண்வெளி கனவுகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
