அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிய நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவிடமிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான புதிய தொடக்கம், இந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலம், 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி ஒரு டி20 தொடரை இழந்துள்ளது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட சவாலான டி20 தொடர் காத்திருக்கும் நிலையில், புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்தத் தோல்வி குறித்து தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மனோஜ் திவாரி, டிரஸிங் ரூமில் இருக்கும் முக்கிய நபரைக் குறிப்பிடாமல், தோல்விக்கான முழுப் பழியையும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீது சுமத்த முயற்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 'இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பேற்பார்கள்? டிரஸிங் ரூமில் உள்ள உண்மையான பிரச்சனை குறித்துப் பேசுங்கள் என்று நான் முன்பே கூறினேன், ஆனால் யாரும் என் வார்த்தைகளை நம்பவில்லை. இப்போது, முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களின் நண்பர்களும், பிஆர் (PR) ஏஜென்சிகளும் இந்தத் தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர்தான் காரணம் எனப் பழிசுமத்தத் தொடங்கிவிடுவார்கள்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
'ஒரு பேட்டராக இது ஸ்ரேயாஸ் ஐயரின் தவறு மட்டுமல்ல, சிறப்பாகச் செயல்படாத மற்ற பேட்டர்களின் தவறும் இதில் உள்ளது. ஆனால், ஒட்டுமொத்தப் பழியையும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது மட்டுமே சுமத்த இந்த குரூப் முயற்சிக்கும். தவறு வீரர்கள் மீது அல்ல, மாறாக டிரஸிங் ரூமில் அமைதியாக அமர்ந்திருக்கும், பெரும்பாலும் யாரும் கேள்வி கேட்காத அந்த முக்கிய நபரின் (யானை போன்ற பெரிய பிரச்சனை) மீதுதான் உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு நாம் தீர்வு காண வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று கம்பீரை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி சாடியுள்ளார். மேலும், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் புறக்கணித்ததையும் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார். பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் மீதான அதீத மோகம் பலன் அளிக்கவில்லை என்றும், முடிவுகளில் நிலையான தன்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து, இந்திய அணி ஜூலை 1 அன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது.