ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீது தொடரப்பட்ட பாலியல் தொல்லை வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் வில் ஸ்மித், ‘பேஸ்டு ஆன் த ட்ரூ ஸ்டோரி’ என்ற இசை நிகழ்ச்சிக்காக உலக சுற்றுப்பயணத்தைக் கடந்த ஆண்டு மேற்கொண்டார். அதில் பிரைன் கிங் ஜோசப் என்ற வயலின் கலைஞர் பணியாற்றினார். அவர் வில் ஸ்மித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். லாஸ் வேகாஸ் ஓட்டல் அறையில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து பாலியல் சைகைகள் கொண்ட குறிப்புகள் மற்றும் சில பொருட்களை விட்டுச் சென்றதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.
இது குறித்து, புகாரளித்ததற்காகத் தன்னை சுற்றுப்பயண குழுவிலிருந்து நீக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, வில் ஸ்மித் தரப்பு வழக்கறிஞர், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, பொய்யானவை என்று மீண்டும் தெரிவித்தார். இருந்தும் மனுதாரருக்குத் திருத்தப்பட்ட மனுவை மீண்டும் தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.