முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இதுவரை ஆஜராகவில்லை. இன்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டிய நிலையில், அவர் இதுவரை ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்ட 9 பேர், அதிமுக எம்.எல்.ஏ-க்களை இழுக்க பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சுமார் ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தொடர் விசாரணையில், அதிமுக ஆட்சி கவிழ்ப்பு பின்னணியில், கோவை தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இருவரும் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.
செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டும் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகாதது திருவல்லிக்கேணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

