மின் துறையின் 2025-26 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் புள்ளி விவரங்கள் நீக்கப்பட்டு, பழைய சரத்துகள் மற்றும் வரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்றும், புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றும் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், மின்வாரிய கொள்ளை தொடர்பான விளக்கக் குறிப்பில் வெறும் 5 பக்கங்களில் மட்டுமே தரவுகள் இருப்பதாகவும், மீதமுள்ளவை புள்ளி விவரங்கள் அற்ற பழைய குறிப்புகள் என்றும் தெரிவித்தார். புள்ளிவிவரங்கள் இல்லாத கொள்கை விளக்கக் குறிப்புதான் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
'ஒரு வார்த்தை பேசினால், மறுவார்த்தை பேச எங்களுக்கும் தெரியும். தவறாக பேசிவிட்டு அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவீர்கள்' என்று கூறியதைச் சுட்டிக்காட்டி, 'அமைதியாக செல்வதற்கு இந்த அவைக்கு நாங்கள் வரவில்லை. மக்கள் பிரச்சனையை பேசுவதற்காகத் தான் பேரவைக்கு வருகிறோம்' என்று செந்தில் பாலாஜி ஆவேசமாக கூறினார்.
திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மின் துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டதாக நிர்மல்குமார் கூறியதை மேற்கோள் காட்டி, தற்போதுள்ள தவெக அரசில் மாற்றமே இருக்காதா என்பதைப் பார்க்கலாம் என்றும், அமைச்சரை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார். பேசும்போது கவனமாகப் பேச வேண்டும் என்றும், மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
தவெக அரசில் இதுவரை மின் விநியோகம் செய்வதற்கான துறை ரீதியான கூட்டமே நடத்தப்படவில்லை என்றும், லேசான மழைக்கே சென்னையில் மின்வெட்டு ஏற்படுகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்தார். இதுதான் இன்றைய நிலைமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மின்வாரியத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாக கூறப்படும் நிலையில், 38 ஹார்டு டிஸ்க்குகள் கிடைத்ததாக கூறுவது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
