மாநிலத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு பிரச்னைக்கு பொறுப்பேற்காமல், மின்துறை அமைச்சர் 'கப்சா' கதைகளை அரங்கேற்றுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். 'மாற்றத்தை தருகிறேன்' என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த த.வெ.க அரசு, ஒரு மாதத்திலேயே மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிப்பதாகவும், இதனால் பொதுமக்கள் நள்ளிரவிலும் சாலைகளில் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். 'பஞ்ச் டயலாக்' பேசிய முதலமைச்சர் மின்வெட்டு குறித்து மவுனம் சாதிப்பதாகவும், மின்துறை அமைச்சரோ தினந்தோறும் ஒரு 'கான்ஸ்பிரசி தியரி'யை கூறி திசை திருப்புவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். 'ஃபியூஸ் கேரியர் திருட்டு', 'ஹார்ட் டிஸ்க் மாயம்', 'மின்வாரிய பணியாளர்கள் சதி' என அமைச்சர் கூறிவரும் காரணங்கள் எதற்கும் அடிப்படை இல்லை என்றும், இது நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது என்றும் செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த திராவிட மாடல் ஆட்சியில், மின் தேவை அதிகரித்தாலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2021ல் 16,481 மெகாவாட் ஆக இருந்த மின் தேவை, 2026ல் 20,974 மெகாவாட் ஆக உயரும் என கணிக்கப்பட்டபோதும், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதாக அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார். சென்னையிலும் கடந்த ஆண்டு 4,663 மெகாவாட் ஆக இருந்த மின்தேவை, இந்த ஆண்டு 4,769 மெகாவாட்டாக உயர்ந்தபோதும் மின்வெட்டு ஏற்படவில்லை என்றும், இந்தியாவிலேயே மிகக் குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிர்வாகத் திறமையின்மையை மறைக்க 'ரீல்ஸ்' செய்வதை நிறுத்திவிட்டு, மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண த.வெ.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். 'பலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது' என்ற கருத்தை சுட்டிக்காட்டி, அமைச்சரும் முதலமைச்சரும் 'ரியாலிட்டிக்கு' வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.