மின்சாரத் துறை டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டரில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. இது அவரைச் சுற்றியுள்ள சட்டச் சிக்கல்களை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில், 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், டெண்டர் அதிகாரிகள் மீது சிபிஐ இன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. இந்த முறைகேட்டால் அரசுக்கு சுமார் ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ இந்த விவகாரத்தை மறுவிசாரணை செய்தது. அதன் தொடர்ச்சியாக, ஊழல், சதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது இந்த முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, இந்த ஊழலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இதில் தொடர்புடைய பிறரின் பங்கு குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.