தங்கம், வெள்ளி சுங்கவரி உயர்வு: உடனடியாக திரும்பப் பெறுக – செல்வப்பெருந்தகை

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். விலைவாசி உயர்வால் ஏற்கனவே சிரமப்படும் மக்கள், வரி உயர்வின் மூலம் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, 'தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறிய சில நாட்களிலேயே, தங்கம் மற்றும் வெள்ளிக்கு 15% சுங்கவரி விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடனும், குடும்பங்களின் பாதுகாப்பான சேமிப்புடனும் தொடர்புடைய தங்கம் மீது சுமத்தப்படும் கூடுதல் சுமை என செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபுறம் கட்டுக்கடங்காமல் செல்லும் விலைவாசி உயர்வு, மறுபுறம் திடீரென விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வு. இந்த இரட்டைச் சுமையால் இறுதியில் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான். மக்களின் சேமிப்பையும், பெண்களின் எதிர்கால நம்பிக்கையையும் இந்த வரிவிதிப்பு சுரண்டுகிறது என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொருளாதாரச் சுமைகளால் ஏற்கனவே துன்புறும் மக்களின் நிலையை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த சுங்கவரி உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, ஒன்றிய அரசை செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version