தமிழ் சினிமாவின் பொற்காலமான 1950-60களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சவுகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகை சவுகார் ஜானகிக்கு, தனது மனமார்ந்த இரங்கலை புகழ்பெற்ற பாடகி பி.சுசீலா தெரிவித்துள்ளார்.
சவுகார் ஜானகி, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் 400-க்கும் மேற்பட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த சவுகார் ஜானகி, வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.
சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்ந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. மருத்துவர்களின் தொடர் முயற்சிகளுக்கு மத்தியிலும், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் சவுகார் ஜானகி காலமானார். அவரது மறைவு செய்தி, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரமான நேரத்தில், சவுகார் ஜானகிக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பாடகி பி.சுசீலா தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், 'என் இனிய தோழி சவுகார் ஜானகி மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் நட்பு பல வருடங்களைக் கடந்தது. சினிமாவையும் தாண்டி எங்கள் நட்பு நீடித்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'குறிப்பாக, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்தைகளாக நாங்கள் இருந்தபோது, பாபா தொடர்பான விழாக்களில் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். என் மனம் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இந்தப் பதிவின் மூலம் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சவுகார் ஜானகியின் ஆன்மா இறைவனடியை சேர பிரார்த்திக்கிறேன்' என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். பாடகி பி.சுசீலாவின் இந்த இரங்கல் செய்தி, சவுகார் ஜானகியின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
