தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு நாட்களாக முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மனைவி பிரமு, வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு, வெந்து கொண்டிருந்த சாதத்திற்குள் கை விழுந்ததில் வலது கையின் மூன்று விரல்கள் கடுமையாகத் தீக்காயமடைந்தன.
சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரமு, இரண்டு நாட்கள் ஆகியும் மருத்துவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடுமையான வலிக்கு மருந்து கேட்டால் கூட செவிலியர்கள் அலட்சியமாகப் பதிலளிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 'தனியார் மருத்துவமனையில் பார்த்திருந்தாலோ அல்லது வீட்டிலேயே மஞ்சள் அரைத்துப் பூசியிருந்தாலோ கூட குணமாகியிருக்கும், இங்கு எந்த முன்னேற்றமும் இல்லை' என அவர் கண்ணீருடன் புலம்பியுள்ளார்.
இந்தச் சம்பவம், அரசு மருத்துவமனைகளில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. நோயாளிகளின் வலியைப் போக்க வேண்டிய மருத்துவமனையே, அவர்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரமுவின் நிலை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.