கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மாவட்டச் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரி வர்மன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக நீதிக்காகப் போராடி வரும் குடும்பத்தினர், இலவச வீடோ, அரசு வேலையோ வேண்டாம், எங்களுக்கு நீதி மட்டுமே வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சபரி வர்மனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சிகரமான தகவலைத் தொடர்ந்து, சபரி வர்மனின் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை உடலை வாங்கப் போவதில்லை என அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் சபரி வர்மனின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அப்போது, சபரி வர்மனின் மரணம் குறித்த சந்தேகங்கள் முழுமையாக நீங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என குடும்பத்தினர் அமைச்சர்களிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.
மேலும், பிரேதப் பரிசோதனை தொடர்பான வீடியோ காட்சிகளை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமை அமைப்பின் உதவியுடன் மருத்துவர்கள் மூலம் ஆய்வு செய்து தங்கள் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும் என்றும், மனித உரிமை சார்ந்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னரே சடலத்தை வாங்குவோம் என்றும் குடும்பத்தினர் அமைச்சர்களிடம் தெரிவித்தனர்.
குடும்பத்திற்கு நிவாரணத்தொகை, இலவச வீட்டுமனை, மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தற்காலிக அரசு வேலை போன்ற சலுகைகள் அடங்கிய கோப்புகளுடன் வந்திருந்த அமைச்சர்கள், குடும்பத்தினரின் உறுதியான நிலைப்பாடு காரணமாக அவற்றை வழங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சபரி வர்மனின் மரணம் குறித்த முழுமையான விசாரணை மற்றும் நீதி கிடைக்கும் வரை குடும்பத்தினர் தங்கள் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர்.
