தமிழக முதல்வர் ஆணையின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஊரகப் பொருளாதார வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படை என அமைச்சர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
ஊரக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் இத்துறையின் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றும், திட்டங்களை செயல்படுத்துவதில் எந்தவித தாமதமும் இன்றி கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திட்டங்களின் தரத்தில் எந்தக் குறைபாடும் இருக்கக்கூடாது, சாலைகள் மற்றும் பாலங்கள் தரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து தூய்மையான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, குப்பைகளை 100% அகற்றுவதையும், திடக்கழிவு மேலாண்மையையும் உறுதி செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வண்டல் மண் இலவசமாக வழங்கப்படும் அறிவிப்பின் பயன் அனைவருக்கும் கிடைக்குமாறும், புகார்களுக்கு இடமளிக்காவண்ணம் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். தெருக்கள் தூய்மையாக பராமரிக்கப்படுவதையும், தெருவிளக்குகள் முறையாக செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். சிறுசிறு பணிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வாய்ப்பு வழங்கி பயிற்சி அளிக்க வேண்டும். பணிகளின் தரத்தை உறுதி செய்ய உள்ளூர் இளைஞர்களைக் கொண்ட குழுக்களைப் பயன்படுத்தலாம். அனைத்து பணிகளையும் வீடியோ பதிவு செய்து, பில் செட்டில் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு செயலாளர் பிரசாந்த் எம். வடனேரே, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் பா.பொன்னையா, இ.ஆ.ப., மற்றும் பல்வேறு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

