சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு வெறும் வதந்தியே என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
தி.மு.க. ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என எங்கள் தலைவர் அன்றைய தினமே அறிவித்துவிட்டார். தி.மு.க. 220 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு சரித்திர சாதனை படைத்தது, அதை யாராலும் முறியடிக்க முடியவில்லை. வெற்றி பெற்றபோது நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, அதேபோல் தோல்வியடைந்தபோதும் துவண்டுபோனதும் கிடையாது.
சி.வி. சண்முகம் எப்போதும் பதவியில் இருந்தவர். அவருக்குப் பதவி ஆசை அதிகம். த.வெ.க.வுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு காரணம் தேவை எனக்கூறி, தி.மு.க. மீது வீண் பழி சுமத்துகின்றனர். பூட்டி வைக்கப்பட்டவர்கள் கதவை உடைத்துக்கொண்டு வெளியேறுவதற்கு ஒரு காரணத்தைத் தேடுகிறார்கள்.
அ.தி.மு.க.வை விஜய் உடைக்கப் போகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். கம்யூனிஸ்ட் தலைவர் பேபி, தான் கூறியதை வதந்தி என்று மறுத்துவிட்டார். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றபோதுகூட தி.மு.க. என்ற இயக்கம் உடையவில்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.