இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது, தொடர் விளையாடுவதற்கு முன்பே நீக்கப்படுவார் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டால், அவரால் எப்படி ரன்கள் குவிக்க முடியும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார்.
நடப்பு ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் கடும் நெருக்கடியுடன் விளையாடுவதாகத் தெரிகிறது. அவர் விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகளில் சேர்த்து மொத்தமாக 18 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 54 ஆகவும், இந்த ஆண்டு விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 30 ஆகவும் உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சடகோபன் ரமேஷ், 'ஒரு வீரரின் தலை மீது கத்தியைத் தொங்கவிட்டு விளையாடச் சொன்னால் யாராலும் சிறப்பாக ரன் குவிக்க முடியாது. இது ஒரு வீரருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும்' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், 'தேர்வுக் குழு உறுப்பினர்களையோ அல்லது பயிற்சியாளர்களையோ, 'இந்தத் தொடரில் அணி சிறப்பாகச் செயல்படாவிட்டால் உங்கள் பணி தொடராது' என்று கூறினால் அவர்களால் எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியும்? அதனால்தான் தேர்வுக் குழுவினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது' என்றும் விளக்கினார்.
எனவே, ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக ஒரு வீரர் குறித்து முடிவு எடுப்பது மிகவும் தவறு என்றும், அதுவும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களுக்குப் பொருந்தாது என்றும் சடகோபன் ரமேஷ் வலியுறுத்தினார். 'இந்த இந்திய அணி நிர்வாகத்திற்கு சூப்பர் ஸ்டார்களைப் பார்த்தாலே பிடிக்கவில்லை போலிருக்கிறது. எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை' என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
'இந்த வீரர்கள் எல்லாம் ஒரே இரவில் சூப்பர் ஸ்டார்கள் ஆகிவிடவில்லை. கடந்த 15 ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து, அணிக்காகச் சிறப்பாகச் செயல்பட்டுத்தான் சூப்பர் ஸ்டார்கள் ஆகியிருக்கிறார்கள். எனவே, அந்த சூப்பர் ஸ்டார்களுக்கு அணி நிர்வாகம் உரிய மரியாதையைத் தர வேண்டும்' என்று சடகோபன் ரமேஷ் கேட்டுக்கொண்டார்.
2023 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா எவ்வாறு சிறப்பாக விளையாடினார் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும், அணியின் நன்மைக்காக அதிரடியாக விளையாடி தனது விக்கெட்டை பணயம் வைத்தவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அப்படிப்பட்ட ஒரு வீரரை ரன் சேர்க்கவில்லை என்றால் அணியிலிருந்து நீக்கி விடுவோம் என்று அழுத்தம் கொடுப்பது மிகவும் தவறு என்றும் அவர் கூறினார்.
தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் பவுன்ஸ் நன்றாக இருக்கும் என்றும், அதற்கு ரோஹித் சர்மா ஒரு சிறந்த வீரராக இருப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரோஹித் சர்மா இல்லாமல் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் விளையாடினால், அதன் நஷ்டம் ரோஹித் சர்மாவுக்கு அல்ல, இந்திய அணிக்குத்தான் ஏற்படும் என சடகோபன் ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்தார். உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா இதுவரை 1575 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவரது சராசரி 60 ரன்களுக்கு மேல் உள்ளது, மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 105 ஆக இருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் ரோஹித் சர்மா ஏழு சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
