இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்க உதவி கோரி, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு நள்ளிரவில் சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடருக்கான போட்டியில் விளையாட உள்ள ரிஷப் பண்ட், அதற்கு முன்னதாக கொழும்பில் பயிற்சிப் போட்டியில் பங்கேற்று வருகிறார். இந்த சூழலில், அவர் இரவில் திடீரென முதலமைச்சருக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரருக்கே சொந்த மாநிலத்தில் நிலம் கிடைக்கவில்லையா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவரது சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர்.
தற்போது டெல்லியில் வசித்து வரும் ரிஷப் பண்ட், தனது வசிப்பிடத்தை சொந்த மாநிலமான உத்தரகாண்டிற்கு மாற்ற விரும்புவதாகவும், ஆனால் அங்கு நிலம் வாங்க முடியவில்லை என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 'எனது சொந்த மக்களுக்கு அருகில் வாழ விரும்புகிறேன். இதற்காக டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு மாற நிலம் வாங்க முயன்றேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை, நிலம் வாங்குவது ஒரு கெட்ட கனவாகவே மாறிவிட்டது. அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையிலேயே நிலத்தை வாங்கத் தயாராக உள்ளேன். தயவுசெய்து நிலம் பெற உதவி செய்யுங்கள்' என்று அவர் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, உத்தரகாண்ட் மாநிலத்திற்காக விளம்பரம் செய்ததற்காக அரசு சார்பில் நிலம் தருவதாகக் கூறப்பட்டதையும் ரிஷப் பண்ட் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். தனது சொந்த மாநிலத்தில் முதல் வீட்டைக் கட்ட முதலமைச்சர் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரகாண்டை பூர்வீகமாகக் கொண்ட ரிஷப் பண்ட், டெல்லி அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணிக்குத் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2025-26 நிதியாண்டில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 23.84 கோடி வரி செலுத்தி, அம்மாநிலத்தின் அதிக வரி செலுத்திய நபராக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார்.
முன்னாள் இலங்கை வீரர் ஹஷன், 'சுப்மன் கில்லுக்கு சோதனை.. பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்' என்று பேசியுள்ளார். இந்தச் சூழலில், ரிஷப் பண்ட்டின் இந்த திடீர் கோரிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
