சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தொகுதி மறுசீரமைப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து திமுக ஏற்கனவே தனது யோசனைகளையும் திருத்தங்களையும் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொகுதி மறுவரையறைக்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டத்திருத்தங்கள் வந்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பார் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக திமுக சார்பில் ஏற்கனவே ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆலோசனைகளை அரசு எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் திமுக உறுதியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது இன்னும் பிறக்காத குழந்தை போன்றது என்றும், அதன் பாலினம் தெரிந்த பிறகுதான் பெயர் வைக்க முடியும் என்றும் ஆர்.எஸ்.பாரதி உருவகப்படுத்தினார். தற்போதுள்ள முக்கியப் பிரச்சனை மேகதாது பிரச்சினை என்றும், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெளிவாகப் பேசியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் தமிழ்நாட்டு மக்கள் தாகத்தில் இருக்கும்போது, பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைப்பது அர்த்தமற்றது என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்றும், காவிரி பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தப்படுகிறது என்றும் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுகவின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், காவிரி விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டம் கூட்டப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்களா இல்லையா என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் பட்ஜெட்டில் உருப்படியான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும், வெறும் பொய்கள் மட்டுமே நிறைந்துள்ளன என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்தார். திமுக ஆட்சிக் காலத்தில் மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 நிவாரணம் வழங்கப்பட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அதனை ரூ.20,000 ஆக உயர்த்துவதாகக் கூறியிருந்தாலும், மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.8,000-லிருந்து ரூ.7,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் வெறும் பெயர் மாற்றமாகவே உள்ளன என்றும், திமுக திட்டங்களுக்குப் பெயர் மாற்றிக் கொண்டுள்ளனர் என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்தார். இந்த பட்ஜெட்டில் மக்களுக்குப் பயனுள்ள எந்த அறிவிப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
