தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தின் பல பகுதிகளில் சமீப காலமாக கொலை, தாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பழிவாங்கும் நோக்கில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன' என்று தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் சட்டம் – ஒழுங்கு நிலையை முழுமையாக சீராய்வு செய்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுபவமிக்க உளவுத்துறை காவல் அதிகாரிகளை நியமித்து, முன்கூட்டியே குற்றத் திட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து தகவல் சேகரித்து, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்த ஒருங்கிணைந்த சிறப்புக் குழுவை அமைத்து செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும். நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்வது எந்த அரசுக்கும் மிக முக்கியமான பொறுப்பாகும். தமிழகத்தில் மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்க தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.