ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், மதுபானம் வாங்க பணம் தர மறுத்த மனைவியை கொடூரமாக அடித்து கொன்று, அவரது உடலை இரும்பு பெட்டியில் மறைத்து வைத்த கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரஜ்கர் அருகே வசிக்கும் கிருஷ்ண குமார் ஜாட் (40) என்பவருக்கும் அவரது மனைவி சுலோச்சனா (34) என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் கிருஷ்ண குமார் தகராறு செய்துள்ளார். ஆனால், சுலோச்சனா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ண குமார், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சுலோச்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குற்றத்தை மறைப்பதற்காக, கணவன் கிருஷ்ண குமார், தனது மனைவியின் உடலை கைகளால் கட்டி, வீட்டின் உள்ளே இருந்த ஒரு இரும்பு பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அப்போது, போதையில் இருந்த கிருஷ்ண குமார், தனக்கு தெரிந்த ஒருவரிடம் இந்த கொடூர சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதன் மூலமாகவே காவல்துறையினருக்கு இந்த பயங்கர சம்பவம் தெரியவந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பூட்டப்பட்ட இரும்பு பெட்டியை உடைத்து, அதனுள் இருந்த சுலோச்சனாவின் சடலத்தை மீட்டனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், கணவன் கிருஷ்ண குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் நடந்த நேரத்தில், கிருஷ்ண குமார் மற்றும் சுலோச்சனா தம்பதியரின் 16 வயது மகன் வீட்டில் இல்லை என்றும், அவன் திரும்பி வந்தபோது தாய் எங்கோ சென்றிருப்பதாக தந்தை கூறியதை நம்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், விசாரணையில் கிருஷ்ண குமார் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

