நாடு முழுவதும் தினமும் 2.50 கோடிக்கும் அதிகமானோர் 13,000 பயணியர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். தற்போது, ரயில்வேயில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோருக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்கி ரயில்வே புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுவரை, ரயில்வே சட்டம் 1989ன் படி, உரிய டிக்கெட் இன்றி ரயிலில் பயணிப்போர் மீது 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த அபராதத் தொகையை 500 ரூபாயாக ரயில்வே நிர்வாகம் உயர்த்தி உள்ளது.
இந்த புதிய அபராத விதிமுறையை வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்த வேண்டும் என அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோர் இரட்டிப்பு அபராதத் தொகையை செலுத்த நேரிடும்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'டிக்கெட் தொகையுடன், 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி இது 500 ரூபாயாக உயர்கிறது' என தெரிவித்தனர். ரயில் பயணிகளின் கவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.