டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சி எம்பி நிஷிகாந்த் துபே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி வெளிநாட்டு சக்திகளுக்கு ஒரு ஊதுகுழலாக செயல்படுவதாகவும், அந்நிய சக்திகளால் அவர் ஆட்டிப்படைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
காந்தி குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ராகுல் காந்திக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட நிஷிகாந்த் துபே, 2004 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்து யாருக்கும் தெரியாது என்றும், அங்கு யாரை சந்திக்கிறார், என்ன செய்கிறார் என்பது மர்மமாகவே உள்ளதாகவும் தெரிவித்தார். அவரது வெளிநாட்டு பயணங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தப்போவதாகவும், அவரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.
முன்னதாக, ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பாஜக பலமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரது செலவினங்களுக்கும், அறிவிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த சூழலில், நிஷிகாந்த் துபேயின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
