நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் போராடிய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், ஒன்றிய அரசின் இந்த செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று டெல்லியில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவை அளிப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையைக் கொண்டு வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார். நீட் தேர்வு போன்றவற்றை ஒழிக்க வேண்டுமானால், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அதுவே ஒரே நிரந்தரத் தீர்வு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவேளை, அதில் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை என்றும், இதை கட்சி தொடங்கியபோதே, கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும் என்றும், அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்றும், இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

