நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது முக்கிய அறிவிப்பை வெளியிடும் தேதியை திடீரென மாற்றியுள்ளார். முதலில் வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிப்பதாக இருந்த நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து முக்கிய தகவலை வெளியிட உள்ளதாக அவர் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பாரதிராஜா சார் அவர்களின் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு எனக்கு தனிப்பட்ட துயரமாகத் தோன்றுகிறது. பாரதிராஜா சார் மீதும், சினிமாத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தனது அறிவிப்பை ஒரு நாள் தாமதப்படுத்துவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதனால், அவரது அறிவிப்பு வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு அரசியல் சார்ந்ததா அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்ததா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகவா லாரன்ஸ் தனது வாழ்க்கைக் குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாகக் கூறியிருந்த நிலையில், பாரதிராஜாவின் திடீர் மறைவு அவரைப் பாதித்துள்ளது. இதனால், தனது அறிவிப்பை ஒத்திவைத்து, மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியாகும் அவரது அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.