திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகவா லாரன்ஸ், 'நான் திருச்சி கிழக்கு தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்திகள் பல்வேறு ஊடகங்களில் பரவி வருகின்றன. எனது ஊடக நண்பர்கள் பலர் இதுகுறித்து விளக்கம் கேட்டு என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளனர். இந்த யூகங்கள் ஒரு கட்டத்தில் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று நான் உணரும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், இந்தக் குறிப்பை பகிர விரும்புகிறேன். நான் தற்போது 'பென்ஸ்' படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளேன். எனது படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. என் தாயின் ஆசீர்வாதங்களுடன், எனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வரும் 11ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு, அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்ற யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்காமல், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ராகவா லாரன்ஸ், படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க உள்ளார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 11ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராகவா லாரன்ஸ் என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவரது அறிவிப்பு அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது.