சின்னத்திரை மற்றும் சினிமாக்களில் துணை நடிகையாக நடித்து வரும் 31 வயது இளம்பெண், தன்னை கதாநாயகி ஆக்குவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தயாரிப்பாளர் மற்றும் இரு பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த இந்த நடிகை, பெருங்குடியைச் சேர்ந்த நந்தி ராம நாதன் (65) என்பவருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்துள்ளார். அவர் தன்னை ஒரு சினிமா தயாரிப்பாளர் என்றும், புதிதாக எடுக்கவிருக்கும் படத்தில் கதாநாயகி வாய்ப்பு தருவதாகவும், மேலும் காவேரி தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடக்கும் போட்டோ ஷூட்டில் கலந்துகொள்ளுமாறும் நடிகையை அழைத்துள்ளார்.
நம்பிக்கையுடன் அந்த விடுதிக்குச் சென்ற நடிகை, அங்கு தயாரிப்பாளர் நந்தி ராமநாதனுடன் சென்னை தரமணி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மற்றும் ஒரு 7 வயது சிறுமி ஆகியோருடன் ஒரே அறையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த ஒரு பெண், நடிகையின் செல்போன் மூலம் பல்வேறு கோணங்களில் கவர்ச்சியான தோற்றத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதையடுத்து, படத்தில் சாமி வேஷம் போட வேண்டியிருப்பதால், உடலில் காயத் தழும்புகள் எதுவும் தெரியக்கூடாது என்றும், எனவே முகத்தை மறைத்துக் கொண்டு நிர்வாணக் கோலத்தில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இந்த கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை, அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில், சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நடிகையிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் மற்றும் அவருடன் இருந்த இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் தொந்தரவு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் இருந்த 7 வயது சிறுமியை போலீசார் மீட்டு, அடையாறில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
